ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவொற்றியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கைக்குடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் நாள்தோறும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகச் சென்றுகொண்டிருக்கும் நிலையிலும், அவற்றை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முறையான குடிநீர் கிடைக்காததால், குடிப்பதற்கும் அன்றாட தேவைகளுக்கும் தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனடியாக சரிசெய்து, சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால், திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக கீழக்கைக்குடி கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, மாவட்ட ஆட்சியரின் வருகை காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியே சென்றிருந்ததாகவும், அலுவலகத்திற்கு திரும்பியதும் மீண்டும் புகார் மனு அளித்து, கீழக்கைக்குடி மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்த உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




You must be logged in to post a comment.