27 கத்திக்குத்துகள், கை நிறைய பணம்
சிறுவர்களின் கோவா சொகுசு வாழ்க்கை சினிமாவை மிஞ்சிய பயங்கரம்..
தெலங்கானா பள்ளி முதல்வர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ‘பாபு’ என்ற ஒரு வார்த்தை மூலம் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் சிக்கினர்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் 48 வயதான பள்ளி முதல்வர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பணத்தை கொள்ளையடித்து ஆடம்பரமாக செலவு செய்வதற்காக அவர்கள் இந்த கொலையை திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கொண்டமல்லே பள்ளியில் உள்ள நாகார்ஜுனா பப்ளிக் பள்ளியின் முதல்வரும், இயக்குநருமான கல்லு ரூபா ரெட்டி, ஆகஸ்ட் 12ஆம் தேதி தனது வீட்டில் 27 கத்திக்குத்துகளுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
ஆரம்பத்தில் குறைந்த அளவிலான தடயங்களே கிடைத்த நிலையில், சிசிடிவி காட்சிகள், தடயவியல் ஆதாரங்கள், தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் 80-க்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட விசாரணை மூலம் போலீசார் வழக்கை துப்பு துலக்கியுள்ளனர். ரூபா ரெட்டி தனது கணவரின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால், ஹைதராபாத்தில் இருந்த அவரது கணவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் 5 தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தொடங்கினர்.
அப்போது, கொலைக்கு முன்பு ரூபா ரெட்டி தனது அத்தையுடன் பேசிய கடைசி தொலைபேசி உரையாடலில் ‘பாபு’ என்ற வார்த்தையை குறிப்பிட்டது முக்கிய தடயமாக அமைந்தது.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி சரத் சந்திர பவார் கூறுகையில், “அவர் தொலைபேசியில் பேசியபோது கடைசியாக பதிவான வார்த்தை ‘பாபு’. அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பதை விசாரித்தபோது, அது பள்ளி மாணவர்களை நோக்கி எங்களை அழைத்துச் சென்றது” என்றார்.
இதையடுத்து மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. பள்ளிக்கு தொடர்ந்து வராமல் இருந்த 10ஆம் வகுப்பு மாணவர்கள் 5 பேரிடம் போலீசார் கவனம் செலுத்தினர். அவர்களில் இருவர் சமீபகாலமாக அதிக அளவில் பணம் செலவு செய்ததுடன், நண்பர்களுக்கு விருந்து அளித்ததும் தெரியவந்தது.
இரு மாணவர்களையும் போலீசார் பிடித்து விசாரித்தபோது, திட்டமிட்டு கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, இந்த இரு மாணவர்களின் விடுதி பைகளில் பணமும் செல்போனும் இருந்ததை ரூபா ரெட்டி கண்டுபிடித்து அவர்களை கண்டித்திருந்தார். மேலும் அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததுடன், அவர்கள் விடுதியில் தங்குவதற்குப் பதிலாக தினமும் பள்ளிக்கு வந்து செல்லும் வகையில் மாற்றப்பட்டனர். இதனால் ஏற்பட்ட கோபமும் விரோதமும் கொலைக்கான காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலைக்கு முன்பு சுமார் 5 நாட்கள் திட்டமிட்டு, ரூபா ரெட்டியின் வீட்டை கண்காணித்ததாகவும், தடயங்களை விட்டுச் செல்லாமல் இருப்பதற்காக கத்தி மற்றும் கையுறைகளை வாங்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர். கொலை நடந்த அன்று, மாணவர்களில் ஒருவர் குரங்கு குல்லா மற்றும் கையுறைகள் அணிந்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அங்கு படுக்கையறையில் ரூ.2.50 லட்சம் பணம் இருப்பதை கண்டுள்ளார். ஆனால், அவர் அணிந்திருந்த குல்லா நழுவியதால் ரூபா ரெட்டி அவரை அடையாளம் கண்டு கொண்டதாக கூறப்படுகிறது.
தங்களை அடையாளம் காட்டிவிடுவார் என்ற அச்சத்தில், ரூபா ரெட்டியை 27 முறை கத்தியால் குத்தி, பணத்தை எடுத்துக்கொண்டு இருவரும் தப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் ரத்தக்கறை படிந்த ஆடைகள் மற்றும் குரங்கு குல்லாவை புதைத்து தடயங்களை அழிக்க முயன்றதாகவும், அதன் பின்னர் இருவரும் கோவாவுக்குச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1.54 லட்சம் ரொக்கம், அதில் சில ரத்தக்கறை படிந்த நோட்டுகள், குற்றவாளிகள் வாங்கியதாக கூறப்படும் ஐபோன் மற்றும் ரூபா ரெட்டியின் செல்போன் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
மேலும், விரைவாக பணம் சம்பாதிப்பது எப்படி என்பது தொடர்பாக வீடியோ பகிர்வு தளத்தில் குற்றவாளிகள் தேடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த அதிர்ச்சி கொலை வழக்கில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.




You must be logged in to post a comment.