ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பிடாரிகோவில் தெருவில் உள்ள கோவில் அருகேயுள்ள பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை தீயணைப்புத் துறையினர் துரிதமாக மீட்டு உயிர் காத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவி என்பவருக்குச் சொந்தமான ஆடு எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கயிறு உதவியுடன் திறம்பட மீட்புப் பணியை மேற்கொண்டு ஆட்டை பத்திரமாக மேலே கொண்டு வந்தனர்.
இந்த மீட்புப் பணியை அப்பகுதி மக்கள் பாராட்டிய நிலையில், அந்தக் கிணறு நீண்ட காலமாக பாழடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இதைச் சீரமைக்க பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
“இன்று ஆடு விழுந்தது; நாளை குழந்தையோ, மனிதரோ விழுந்தால் யார் பொறுப்பு?” என்று கேள்வி எழுப்பிய பொதுமக்கள், மேலும் உயிரிழப்புகள் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பே கிணற்றை உடனடியாக மூடவோ, சீரமைக்கவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.




You must be logged in to post a comment.