ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் செயல்பட்டு வரும் 85 நியாயவிலைக் கடைகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக POS (Point of Sale) இயந்திரங்களில் கடுமையான சர்வர் கோளாறு நீடித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், ரேஷன் கடை ஊழியர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் தினமும் ரேஷன் பொருட்களைப் பெற கடைகளுக்கு வருகிறார்கள். ஆனால் இணையவழி விற்பனைக்காக பயன்படுத்தப்படும் POS இயந்திரங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் சர்வர் செயலிழப்பு காரணமாக ஒவ்வொரு பரிவர்த்தனையும் நிறைவேற அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.
இதன் விளைவாக பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாடானை தாலுகாவைச் சேர்ந்த 85 ரேஷன் கடைகளின் ஆண், பெண் ஊழியர்கள் ஒன்றிணைந்து தங்களது POS இயந்திரங்களை திருவாடானை தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் (TSO) ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“தொழில்நுட்பக் கோளாறுக்கு ஊழியர்கள் பொறுப்பல்ல. சர்வர் பிரச்சினையை அரசு உடனடியாக சரிசெய்து, தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மேலும் பாதிக்கப்படும்,” என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் வலியுறுத்தினர்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை நம்பியிருக்கும் ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, POS சர்வர் கோளாறை உடனடியாகச் சரிசெய்து மாற்று நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.




You must be logged in to post a comment.