சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தேனம்மை ஊரணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தர்ம முனீஸ்வரர், மஹா காளியம்மன் ஆலயத்தில் 15-ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதில் பெண்கள், சிறுவர்கள் என 208 பேர் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னதாக ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் மற்றும் மஹா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் திருவிளக்குகளை ஏற்றி பூஜையை தொடங்கினர். பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் வாழை இலையில் பச்சரிசி, மஞ்சள், சந்தனம், தேங்காய், பூ, பழம், குங்குமம் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டியும், தீமைகள் மற்றும் தடைகள் நீங்கவும், உற்றார் உறவினர்கள் ஒற்றுமையுடன் வாழவும் வேண்டி கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.




You must be logged in to post a comment.