அம்பாத்துறை அருகே ஒரிசாவிலிருந்து கடத்தி வரப்பட்ட, 20.5 கிலோ கஞ்சா பறிமுதல். 5 பேர் கைது. இரண்டு இருசக்கர வாகனம் பறிமுதல்.
சின்னாளபட்டியை அடுத்த, அம்பாத்துறை அருகே சிறுநாயக்கன்பட்டி பகுதியில் ஒரிசாவிலிருந்து கடத்திவரப்பட்ட 20.5 கிலோ கஞ்சா திங்கள்கிழமை பறிமுதல் செய்து, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியை அடுத்த, அம்பாத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுநாயக்கன்பட்டி கல்லறைத் தோட்டம் அருகே, கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், அம்பாத்துறை காவல்துறையினர் சம்பவ இடத்தில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, காவல்துறையினரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்ற 5 பேரை மடக்கிப் பிடித்து, அவர்களிடம் இருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பிடிபட்ட ஒடிசாவை சேர்ந்த விக்ரம் பகிரா (34), திண்டுக்கல்லைச் சேர்ந்த முகமது ஆசிகா வட்டாத் (37), மாதவன் (26), வேளாங்கண்ணி (24), முகமது அலி ஜின்னா (31) ஆகிய 5 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 4 பேரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்கரிடம் பேசியதாவது…
திண்டுக்கல் மாவட்டத்தில், தனிப்படை அமைத்து கடந்த ஒரு மாதத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளில், 84 பேர் கைது செய்யப்பட்டு 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 கிலோ கஞ்சா, 2 கார்கள் மற்றும் 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல் – மதுரை 4-வழிச்சாலையில் பெட்ரோல், டீசல் திருடு மற்றும் சாலையோரம் கலப்பட பெட்ரோல் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




You must be logged in to post a comment.