ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள அருள்மிகு சினேகவல்லி அம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோவிலின் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப் பூரத் திருவிழா, புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது.
திருவிழாவையொட்டி, ஆலய கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக அம்பாளுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்ற நிலையில், பின்னர் ஆலய கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டு உற்சவம் முறைப்படி தொடங்கிவைக்கப்பட்டது.
திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெறவுள்ளன. மேலும், கேடகம், பல்லாக்கு, காமதேனு, அன்னம், கிளி, கமலம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி அம்மன் தேரோட்டம், ஆகஸ்ட் 14-ஆம் தேதி திக்விஜயம், ஆகஸ்ட் 15-ஆம் தேதி அம்பாள் தபசு உற்சவம், ஆகஸ்ட் 16-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம், ஆகஸ்ட் 19-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 21-ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
இன்று நடைபெற்ற கொடியேற்று விழாவில், இக்கோவிலுக்குப் பாத்தியப்பட்ட 22½ நாட்டார்கள், அறங்காவலர்கள், திருக்கோவில் அலுவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.




You must be logged in to post a comment.