சாலைகள் சீரமைக்காததை கண்டித்து திமுக கவுன்சிலர் ரமேஷ்கண்ணா வெளிநடப்பு; அடிப்படை வசதிகள் குறித்து கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு
ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் கார்மேகம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் நிலவும் அடிப்படை வசதி குறைபாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக, பல பகுதிகளில் தெருவிளக்குகள் எரியவில்லை, குடிநீர் விநியோகம் பல நாட்களாக முறையாக நடைபெறவில்லை என்றும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். மேலும், பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கவுன்சிலர்களின் தொலைபேசி அழைப்புகளைக்கூட ஏற்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஒரே நேரத்தில் பல கவுன்சிலர்கள் தங்களது குறைகளை முன்வைத்ததால் கூட்டத்தில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
அப்போது பேசிய திமுக கவுன்சிலர் ரமேஷ்கண்ணா, தனது வார்டில் மூன்று முதல் நான்கு தெருக்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்ட நிலையில், பல மாதங்கள் கடந்தும் சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பதாக தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் அவர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
இந்த சம்பவத்தால் நகர்மன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.









You must be logged in to post a comment.