‘வரி செலுத்துகிறோம்… ஆனால் சாலை வசதி இல்லை’ – உடனடியாக புதிய தார்ச்சாலை அமைக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட கூகுடி ஊராட்சியின் நெடுமரம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களின் பயன்பாட்டிற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை, அதன் பிறகு இதுவரை எந்தவித சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாததால் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.
சாலையில் இருந்த ஜல்லிக்கற்கள் முற்றிலும் பெயர்ந்து, கரடுமுரடான பாதையாக மாறியுள்ளது. மேலும், சாலை முழுவதும் புற்கள், செடிகள் மற்றும் கொடிகள் முளைத்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சாலையை தினமும் பயன்படுத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், விவசாயிகள், முதியோர் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி நிலைதடுமாறி விழும் அபாயம் இருப்பதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அடிப்படை சாலை வசதியே இல்லாததால், வளர்ச்சி திட்டங்களில் நெடுமரம் கிராமம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, உயிரிழப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாகவே மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை/ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்துள்ள இந்தச் சாலையை முழுமையாக சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று நெடுமரம் கிராம பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.




You must be logged in to post a comment.