“வனத்துறையினர் தொடர்ந்து இடையூறு செய்தால் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து தர்ணா போராட்டம் நடத்துவோம்” – மாவட்ட ஆட்சியரிடம் மீனவ மக்களின் உருக்கமான கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்திற்குட்பட்ட ஒப்பிலா கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மீனவ குடும்பங்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு வனத்துறையினர் தொடர்ந்து இடையூறு செய்து, மிரட்டுவதாக மீனவ மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக, முந்தைய ஆட்சிக்காலத்தில் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் தங்களின் வாழ்வாதாரத்திற்கும் குடியிருப்பிற்கும் நிரந்தர பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனுவில், “தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் எங்களை திடீரென வெளியேற்ற முயற்சித்தால், எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். ஒவ்வொரு வீட்டிலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் உள்ளனர். அவர்கள் எங்கே செல்வார்கள்? எங்கள் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்படும்” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், வனத்துறையினர் தொடர்ந்து தங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டால், இந்திய குடியுரிமையை உறுதிப்படுத்தும் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த மனுவை பரிசீலித்து, ஒப்பிலா கிராம மீனவ மக்களின் வாழ்வுரிமை, குடியிருப்பு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.




You must be logged in to post a comment.