தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் பகுதியில் வெறி நாய்களின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. இப்பகுதியில் சுதர்சிங் என்பவரது தோட்டத்தில் ஆறு ஆடுகள் மற்றும் மாடியனூரில் விவசாயி மகாராஜா என்பவரின் மூன்று செம்மறி ஆடுகள் வெறி நாய்களால் கடித்து கொல்லப்பட்டு உள்ளது. ஆவுடையானூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெறிநாய்கள் தொல்லையால், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வாழ்வாதாரம் நடத்தி வரும் ஏழை விவசாயிகள் பெரும் அச்சத்திற்கும் பொருளாதார இழப்பிற்கும் உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து இப்பகுதி சமூக ஆர்வலர் கம்யூனிஸ்ட் முருகன் தெரிவித்ததாவது, ஆவுடையானூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெறிநாய் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் கால்நடைகளுக்கு பாதுகாப்பு இல்லை. குறிப்பாக, இரவு நேரங்களில் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெறி நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது
பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலை இனியும் தொடரக்கூடாது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து, உரிய மற்றும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வெறி நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும், வெறிநாய்களின் தாக்குதலால் கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய அரசு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு சமூக ஆர்வலர் முருகன் வலியுறுத்தி உள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.