ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட மேல்பனையூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு புலிக்குட்டி அய்யனார் கோவிலில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து புகுந்து, உண்டியலில் இருந்த பணம் மற்றும் சுவாமியின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 24 கிராம் வெள்ளிச் சங்கிலியை திருடிச் சென்ற சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, நேற்று இரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தையும், சுவாமியின் கழுத்தில் இருந்த சுமார் 24 கிராம் எடையுள்ள வெள்ளிச் சங்கிலியையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் நிர்வாகத்தினர் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, சம்பவம் குறித்து திருவாடானை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்டு, கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கோவிலில் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்வதுடன், சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த துணிகர திருட்டுச் சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




You must be logged in to post a comment.