ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தொண்டி மகாசக்திபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், தங்களது மீன்பிடி வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமைகள் இரண்டையும் பத்திரமாக மீட்டு மீண்டும் கடலில் விட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
தொண்டி மகாசக்திபுரத்தைச் சேர்ந்த சதீஸுக்கு சொந்தமான விசைப்படகில் முனீஸ் உள்ளிட்ட இரண்டு மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வலையை எடுத்தபோது, அரிய வகையைச் சேர்ந்த இரண்டு கடல் ஆமைகள் அடுத்தடுத்து வலையில் சிக்கியிருந்ததை கண்டனர்.
உடனடியாக ஆமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நீண்ட நேரம் போராடி மீன்பிடி வலையை அறுத்து இரு ஆமைகளையும் பாதுகாப்பாக மீட்டு மீண்டும் கடலுக்குள் விட்டனர்.
பாதுகாக்கப்பட்ட கடல் ஆமைகள் வலையில் சிக்கினால் அவற்றை உயிருடன் மீட்டு கடலில் விட வேண்டும் என்ற நடைமுறையைப் பின்பற்றி மீனவர்கள் இந்த செயலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீட்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உயிரினங்களை பாதுகாக்கும் பொறுப்புணர்வுடன் செயல்பட்ட மீனவர்களின் மனிதநேய நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
அதே நேரத்தில், ஆமைகளை மீட்கும் முயற்சியில் தங்களது மீன்பிடி வலை சேதமடைந்ததாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.




You must be logged in to post a comment.