இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு அரசாளவந்த அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற பால்குட திருவிழா, பக்தி பரவசத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை முதலே கோயிலில் திரண்ட பக்தர்கள் அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விழாவையொட்டி விரதமிருந்த பக்தர்கள், திரௌபதி அம்மன் திருக்கோயிலில் இருந்து பால்குடம் சுமந்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் முக்கிய வீதிகள் வழியாக பக்தி முழக்கங்களுடன் ஊர்வலமாக வந்து அரசாளவந்த அம்மன் திருக்கோயிலை வந்தடைந்தனர். ஊர்வலத்தைக் காண சாலையோரங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அரசாளவந்த அம்மன் மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
விழாவையொட்டி கோயிலுக்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை வேளையில் நடைபெற்ற பூச்சொரிதல் விழா பக்தர்களை பரவசப்படுத்தியது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்தது.
பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர். பக்தர்களின் பெரும் திரளால் ஆர்.எஸ். மங்கலம் பகுதி முழுவதும் திருவிழா கோலமாக காட்சியளித்தது.




You must be logged in to post a comment.