ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிகளுக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
ஓட்டுநர் உரிமம் பெறாத பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவது மோட்டார் வாகனச் சட்டத்திற்கு எதிரானதுடன், அவர்களின் உயிருக்கும் சாலையில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருவதாக வேதனையாகும் வருத்தமாகும் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் .
பள்ளிக்கல்வித்துறை மாணவர்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், கீழக்கரை பகுதியில் அந்த அறிவுறுத்தல்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல பள்ளி மாணவர்கள் தினமும் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வருவதாகவும், சம்பந்தப்பட்ட துறைகள் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகள், முக்கிய சந்திப்புகள் மற்றும் சாலைகளில் காவல்துறை தொடர்ந்து வாகனச் சோதனைகளை மேற்கொண்டு, சட்டவிரோதமாக வாகனம் இயக்கும் மாணவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்குவதைத் தவிர்த்து, சட்டத்தை மதிக்கும் பொறுப்புணர்வை வளர்க்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சாலைப் பாதுகாப்பு என்பது காவல்துறையின் பொறுப்பு மட்டுமல்ல; பெற்றோர், பள்ளி நிர்வாகம், கல்வித்துறை மற்றும் சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும். ஒரு சிறிய அலட்சியம் கூட உயிரிழப்பு போன்ற பெரும் சோகங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை இணைந்து சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
“விபத்து நடந்த பிறகு நடவடிக்கை அல்ல; விபத்து நடக்காமல் தடுப்பதே நிர்வாகத்தின் முதன்மை பொறுப்பு” என்பதே கீழக்கரை மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.




You must be logged in to post a comment.