இராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வாணியவல்லம் ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடக் கட்டடப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நயினார்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்ததுடன், ஸ்மார்ட் வகுப்புகளை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் நயினார்கோயில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் வருகைப் பதிவேடு மற்றும் மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், மருத்துவமனை வளாகத்தில் இருந்த பழுதடைந்த வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.
சமத்துவபுரம் குடியிருப்பு பகுதிக்குச் சென்று பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், இராதாபுளி ஊராட்சியில் பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் சேதமடைந்த சாலையை பார்வையிட்டு, மழைக்காலம் தொடங்கும் முன் சாலையை சீரமைக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
வாதவனேரி ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நாடக மேடைக் கட்டடப் பணிகளை ஆய்வு செய்த அவர், பணிகளை விரைவாக நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அப்பகுதியில் சீமை கருவேல மரங்களை ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்து, அவற்றை அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
தானியாபுளி ஊராட்சியில் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.42.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலைகளையும், பி.கொடிக்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.29.70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஊராட்சி அலுவலகக் கட்டடப் பணிகளையும் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல். ரெஜினி, செயற்பொறியாளர் அழகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரோக்கிய மேரி சாரல், உதவி பொறியாளர் சம்பு முத்துராமலிங்கம், ஒன்றியப் பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், சாலை ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
















You must be logged in to post a comment.