பால்குட ஊர்வலம், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய நூற்றுக்கணக்கான பக்தர்கள்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தென்கிழக்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆண்டு உற்சவ விழா, கடந்த ஜூலை 17ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் ஏந்தி, நான்கு ரத வீதிகளிலும் பக்தி முழக்கங்களுடன் ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர்.
ஊர்வலத்தின் போது வழிநெடுகிலும் பொதுமக்கள் பக்தர்களின் கால்களில் மஞ்சள் நீர் ஊற்றி மரியாதை செலுத்தி வழிபட்டனர். பின்னர் கோவிலை வந்தடைந்த பக்தர்கள், ஆலயம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
அதைத் தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றுச் சென்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.




You must be logged in to post a comment.