வறுமை கனவுகளை தடுக்க முடியாது” என்பதை தனது வாழ்க்கையால் நிரூபித்துள்ளார் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கீழ்குடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்.
குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு கூலி வேலைக்குச் சென்ற ரமேஷ், கடின உழைப்புக்கு நடுவிலும் தனது கிரிக்கெட் மீதான ஆர்வத்தை கைவிடவில்லை. வேலை முடிந்த பிறகு கிடைத்த ஓய்வு நேரங்களில் உள்ளூர் மைதானங்களில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.
அவரது திறமையை கவனித்த சிங்கப்பூர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள், அவரை தேசிய அணியில் இணைத்தனர். தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் சிங்கப்பூர் அணிக்காக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்திய ரமேஷ், தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2026 டி20 தொடரில் திருச்சி மாவட்ட அணிக்காக விளையாட அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
TNPL தொடருக்கான பயிற்சியில் பங்கேற்பதற்காக சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த ரமேஷுக்கு, கீழ்குடி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் மாலை அணிவித்து, சால்வை போர்த்தி, பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது சாதனையை கிராம மக்கள் பெருமிதத்துடன் கொண்டாடினர்.
வெளிநாட்டில் கூலி தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, விடாமுயற்சி மற்றும் திறமையால் TNPL போன்ற முக்கிய கிரிக்கெட் மேடையில் இடம்பிடித்திருக்கும் ரமேஷின் பயணம், கிராமப்புற இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




You must be logged in to post a comment.