நிலக்கோட்டை அருகே அங்கன்வாடி ஊழியரிடம் புர்காவை அகற்ற வற்புறுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! சிஐடியு உட்பட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தல்..
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட திம்மிநாயக்கன்பட்டி அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர், அரசின் சீருடையை அணிந்து அதன் மேல் தனது மத நம்பிக்கையின் அடிப்படையில் புர்கா அணிந்து வழக்கம்போல் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், 09.07.2026 இன்று ஆய்விற்காக வந்த சி.டி.பி.ஓ. வாசுகி “சீருடை மட்டுமே அணிய வேண்டும்; புர்காவை கழற்ற வேண்டும்” என்று கூறி, அங்கன்வாடி ஊழியரை புர்காவை அகற்றுமாறு வற்புறுத்தி கழட்ட வைத்ததாக தெரிகிறது. இதனால் அந்தப் பெண் ஊழியர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில் சிஐடியு, திமுக, எஸ்டிபிஐ, புரட்சி தமிழர் கட்சி மமக, ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் சம்பவம் குறித்து விளக்கம் கேட்கச் சென்றபோது, “சீருடை அணியவில்லை என்றால் அதுகுறித்து கேள்வி எழுப்ப அதிகாரிகளுக்கு உரிமை இருக்கலாம். ஆனால், சீருடையின் மேல் அணிந்திருக்கும் புர்காவை அகற்றுமாறு கட்டாயப்படுத்துவதற்கு எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை. இது ஒருவரின் மதச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளைத் தொடும் மிக முக்கியமான விஷயம்” என்று எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், இத்தகைய செயலுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அதிகாரி எந்த வருத்தத்தையும் தெரிவிக்காமல், “எங்கு வேண்டுமானாலும் புகார் கொடுங்கள்” என்று பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
ஒரு அரசு அதிகாரி, அரசு ஊழியர்களிடம் சட்டத்திற்கு உட்பட்ட அதிகார வரம்பிற்குள் மட்டுமே செயல்பட வேண்டும். ஒருவரின் மத நம்பிக்கை மற்றும் தனிப்பட்ட உரிமைகளில் தலையிடும் வகையிலான அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே, இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு, உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்..
இந்த சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




You must be logged in to post a comment.