இராமநாதபுரம் அண்ணா நகரில் காற்று நாயக்கர் சமூகத்தினருக்கு பாத்தியப்பட்டு அருள்பாலித்து வரும் ஸ்ரீ சமயபுர மாரியம்மன் ஆலயத்தின் 42வது முளைப்பாரி உற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான அக்னிச்சட்டி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. நொச்சிவயல் ஊரணிக்கரையில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாதாரண மற்றும் பத்து ரவுண்டு வடிவ அக்னிச்சட்டிகளை ஏந்தி, சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நகர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் அண்ணா நகரில் உள்ள ஸ்ரீ சமயபுர மாரியம்மன் ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
அதனைத் தொடர்ந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இரட்டை குதிரை சாரட் வண்டியில் எழுந்தருளிய ஸ்ரீ சமயபுர மாரியம்மன் நகர் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் நிறைவு நாளான புதன்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.




You must be logged in to post a comment.