உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கோவை மாநகர காவல் துறை மற்றும் அர்-ரஹ்மான் அகாடமி கட்டணமில்லா கல்வியகம் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் பேரணி, கோவை கரும்புக்கடை பகுதியில் இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கரும்புக்கடை (D6) காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்துரு மற்றும் கோவை மாநகராட்சியின் 86-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அகமது கபீர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அர்-ரஹ்மான் அகாடமியின் நிர்வாகிகள் அப்துல் ஹக்கீம், ஜுனைது உசேன், சிராஜ்தீன், அப்துல் சத்தார், ஜுபைர் உள்ளிட்டோர் மற்றும் ஆசிரியர்கள் பேரணியை வழிநடத்தினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, போதைப்பொருளின் தீமைகளை எடுத்துரைக்கும் பதாகைகளை ஏந்தியும், போதைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும் கரும்புக்கடை பகுதியின் முக்கிய சாலைகள் வழியாக பேரணியாகச் சென்றனர்.
மாணவர்களின் உற்சாகமான பங்கேற்பும், விழிப்புணர்வு முழக்கங்களும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததுடன், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பொதுமக்களும் பேரணிக்கு நல்ல வரவேற்பு அளித்தனர்.
இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்கவும், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கவும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என நிகழ்வில் பங்கேற்றோர் வலியுறுத்தினர்.




You must be logged in to post a comment.