ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட தில்லையேந்தல் ஊராட்சியின் 500 பிளாட், 200 பிளாட், இந்திரா நகர், வைரம் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகளாக சாலை, தெருமின்விளக்கு, தடையில்லா மின்சாரம் பாதாளசாக்கடை மற்றும் ரேஷன் கடை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டும், தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் இதுவரை எந்தவித நிரந்தர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, ரேஷன் கடை அமைப்பதற்கான இடம் இருந்தும், “ரேஷன் கடை கட்டித் தரப்படும்” என்று உறுதியளிக்கப்பட்டதாகவும், தற்போது மீண்டும் திமுக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் அப்பகுதியை நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை என்றும் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், ரேஷன் பொருட்களை வாங்க 5 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், முதியவர்கள் மற்றும் பெண்கள் ரூ.200-க்கும் மேல் ஆட்டோ கட்டணம் செலுத்தி அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அடிப்படை வசதிகள் இல்லாத இந்த நிலை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, புதிய அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் தரமான சாலை, தெருமின்விளக்குகள், தடையில்லா மின்சாரம் பாதாளசாக்கடை மற்றும் நிரந்தர ரேஷன் கடையை அமைத்து, பல ஆண்டுகளாக நீடித்து வரும் மக்களின் அவல நிலைக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.









You must be logged in to post a comment.