ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, பாரதி நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்று நிலையம் அருகே குடிநீர்க் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீரேற்று நிலையத்தின் எதிர்புறத்தில் சாக்கடைக் கழிவுநீர் வாய்க்கால் ஓடிவரும் நிலையில், உடைந்துள்ள குடிநீர்க் குழாயில் இருந்து தொடர்ந்து தண்ணீர் கசிந்து வீணாகி வருகிறது. மேலும், குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் நேரங்களில் குழாயில் ஏற்படும் அழுத்தக் குறைவு காரணமாக, அருகிலுள்ள சாக்கடை நீர் உடைப்பு வழியாக குழாய்க்குள் புகுந்து கலக்கும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இந்த குடிநீரையே அன்றாட பயன்பாட்டிற்காக நம்பியுள்ள நிலையில், குடிநீர் மாசடைந்தால் வயிற்றுப்போக்கு, தொற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்று நிலையம் அமைந்துள்ள பகுதியிலேயே இத்தகைய நிலை தொடர்வது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, உடைந்த குடிநீர்க் குழாயை அவசர அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்றும், குடிநீரின் தரத்தை பரிசோதித்து மக்களின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.




You must be logged in to post a comment.