கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமபந்தி நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் சி.ஐ.டி.யு தாலுக்கா பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு, பொதுமக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர்.
மனுவில், பவானி நதி தொடர்ந்து மாசுபட்டு வருவதால் அதனைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் முறையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் நகரில் தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்தி, கழிவுநீர் மேலாண்மை மற்றும் தினசரி சுகாதாரப் பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வன மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக, வேழம் இயலியல் பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், மனித–விலங்கு மோதல்களைத் தடுக்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஏழை மற்றும் நிலமற்ற குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்தி, தகுதியான பயனாளிகளை அடையாளம் கண்டு அரசு திட்டத்தின் கீழ் வீட்டுமனை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சானவாஸ், முகமது அலி ஜின்னா, மனசே சாமுவேல், குணசேகரன், நாகஜோதி, தௌலத் நிஷா, லூயிஸ், பாரத் சாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் மனுவை வழங்கினர்.
கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் விரிவான விளக்கங்களை அளித்த அவர்கள், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தனர். ஜமபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களின் பிரச்சினைகள் நேரடியாக முன்வைக்கப்பட்டதால், பல்வேறு தரப்பினரும் இந்த முயற்சியை வரவேற்றனர்.




You must be logged in to post a comment.