பங்கு சந்தையில் இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்காளத்தை சேர்ந்த இளைஞரை தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சுவாமி சன்னதி தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இன்ஸ்டாகிராமில் அமெரிக்க பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என வந்த விளம்பரத்தை நம்பி, அதில் இருந்த லிங்க் மூலம் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து, அவர்கள் கூறிய செயலியை (App) பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் ரூ. 92 லட்சம் முதலீடு செய்துள்ளார்.
பின்பு அதற்கான லாபத் தொகையை பெறுவதற்கு மேலும் ரூ. 37 லட்சம் கட்ட வேண்டும் என கூறிய பின்னர் தான், அவர் ஏமாற்றப்பட்டதை அறிந்து தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த நபர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அசோக் குமார் உத்தரவின் பேரில், தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையிலான காவல் துறையினர் மேற்கு வங்காளத்திற்கு சென்று மேற்படி பண மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்காள மாநிலம், வடக்கு 24 பார்கனாஸ் மாவட்டம், தமக்கலியை சேர்ந்த நவாப் அலி கோல்டர் என்பவரின் மகன் தாரிகுல் கோல்டர் (26) என்பவரை கொல்கத்தாவில் வைத்து கைது செய்தனர்.
தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, தென்காசி கொண்டு வந்து விசாரணை முடித்து தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து, நீதிமன்ற காவல் பெற்று, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு, மேற்கு வங்காளம் சென்று எதிரியை கைது செய்த தென்காசி சைபர் கிரைம் காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.