திண்டுக்கல் ஸ்பா மையத்தில் ஹைடெக் விபசாரம்: பெண் உட்பட 3 பேர் கைது, 4 பெண்கள் மீட்பு!
திண்டுக்கல் நகர்பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் மறைவில் ஹைடெக் முறையில் விபசாரம் நடந்து வந்ததாக வந்த தகவலை அடுத்து, போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பெண்கள் மீட்கப்பட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களுக்கு, திண்டுக்கல் நகரில் சில மசாஜ் சென்டர்களில் விதிமீறல் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நகர் துணை காவல் கண்காணிப்பாளர் கார்திக் மேற்பார்வையில், நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், சார்பு ஆய்வாளர்கள் வாணி, அனுசுயா மற்றும் காவலர்களுடன் அக்ரஹார சாலை, மங்கை டவரில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், அங்கு அழகிகளை வைத்து ஹைடெக் முறையில் விபசார தொழில் நடத்தப்பட்டது தெரியவந்தது. ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து, இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சென்னை கிண்டியைச் சேர்ந்த பத்மா வயது 37, திண்டுக்கல் முருகபவனத்தைச் சேர்ந்த சுரேஷ் வயது 44, வடமதுரை வேல்வார்கோட்டையைச் சேர்ந்த சாமிநாதன் வயது 50 ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 4 பெண்களையும் மீட்டு, மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கைதான மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




You must be logged in to post a comment.