இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், பெரியபட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு புது குடியிருப்பு கிராம பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள், தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரி மற்றும் வெளியூர் பயணங்களில் மிகுந்த சிரமம் அடைந்து வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தெற்கு புதுக்குளம் கிராமத்திற்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தனர்.
மேலும், அப்பகுதியில் பேருந்து இயக்குவதற்கான சாலை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது சில இடங்களில் உள்ள மின்கம்பங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றை உடனடியாக மாற்று இடத்திற்கு மாற்றிட மின்வாரியத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், தெற்கு புதுக்குளம் கிராமத்திற்கு விரைவில் பேருந்து சேவை தொடங்கப்படும் என அமைச்சர் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
தொடர்ந்து, அமைச்சர் பள்ளி மாணவ, மாணவியர்களை சந்தித்து பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி, கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீ நிகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் பத்மகுமார், கீழக்கரை வட்டாட்சியர் இராமசுப்பு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.