தமிழ்நாடு சிஐடியு-வுடன் இணைந்துள்ள மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் மற்றும் உயரதிகாரிகளை நேரில் சந்தித்து ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, தமிழக அரசின் முக்கிய மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றான மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு வீடு தேடி மருத்துவ சேவைகள் வழங்கும் இந்தத் திட்டத்தில், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றாத நோய்களை கண்டறிதல், நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்தல், முதியோர்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், திட்ட ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, காலமுறை ஊதிய முறை அமலாக்கம், சம வேலைக்கு சம ஊதியம், மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், பயணப்படி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் சிஐடியு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
பல ஆண்டுகளாக திட்டத்தின் வெற்றிக்காக பணியாற்றி வரும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சங்கத் தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி கேட்டுக்கொண்டார்.
இந்த கோரிக்கைகளை கவனமாக கேட்டறிந்த உயரதிகாரிகள், அவை தொடர்புடைய துறைகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.