வன்முறையைத் தூண்டும் ‘எக்ஸ்’ பதிவுகள்: 3 மணிநேரத்தில் நீக்க தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் கெடு!
சமூக வலைத்தளமான ‘எக்ஸ்’ (X) தளத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பகிரப்பட்டுள்ள குறிப்பிட்ட பதிவுகளை உடனடியாக முடக்க கோரி, அந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு அவசர நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசியல் ரீதியாக உணர்ச்சிகளைத் தூண்டி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், சட்டவிரோத கூட்டங்களை ஊக்குவிக்கும் வகையிலும் சில பதிவுகள் இருப்பதாக காவல் துறையின் சமூக ஊடக கண்காணிப்புப் பிரிவு (Social Media Cell) கண்டறிந்துள்ளது.
இதனால் உயிர்ச் சேதமோ அல்லது பொதுச் சொத்துக்களுக்கு சேதமோ ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) 2000-ன் பிரிவு 79(3)(b) மற்றும் 189 BNS ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் எக்ஸ் நிறுவனத்தின் குறைதீர்க்கும் அதிகாரிக்கு சைபர் கிரைம் போலீசார் சட்டப்பூர்வ அறிவிப்பை (Legal Notice) அனுப்பியுள்ளனர். அதில், இணைக்கப்பட்டுள்ள சர்ச்சை பதிவுகளின் (URL) இணைப்புகளை உடனடியாக முடக்க வேண்டும் எனவும், இந்த நோட்டீஸ் கிடைத்த 3 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையை (Compliance Report) சமர்ப்பிக்க வேண்டும் எனவும் திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது.




You must be logged in to post a comment.