தந்தையின் கடைக்கு தீவைத்த மகன்: ரூ.7 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்!
கருங்குளம் பகுதியில், மதுபோதையில் தந்தையின் பழைய இரும்பு கடைக்கு மகனே தீ வைத்த சம்பவத்தில், அருகில் இருந்த மளிகை கடையும் எரிந்து சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அரசு மருத்துவமனை அருகே தங்கசாமி என்பவர் பழைய இரும்பு கடையும், ரகு சரவணன் என்பவர் மளிகை கடையும் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, தங்கசாமியின் மகன் வெற்றிவேல் (36) மதுபோதையில் தனது தந்தையின் இரும்பு கடைக்குத் தீ வைத்துள்ளார்.
தீ மளமளவென பரவி அருகில் இருந்த ரகு சரவணனின் மளிகை கடைக்கும் தொற்றியது. இதில் கடையிலிருந்த குளிர்சாதனப் பெட்டி, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் என மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
செய்துங்கநல்லூர் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய வெற்றிவேலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தந்தையின் கடைக்கு மகனே தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




You must be logged in to post a comment.