பாஜகவுக்கு பலத்த அடி! 12 ஆண்டுகளில்.. மத்திய அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்வது இதுவே முதல் முறை! சாதித்துக் காட்டிய கரப்பான் பூச்சிகள்..
மாணவர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் எவ்வளவோ போராட்டங்கள் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நடந்திருக்கிறது. ஆனால், மத்திய அமைச்சர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல்முறையாகும்.
கடந்த 2014ம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது. அதன் பிறகு மத்திய அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன. சில போராட்டங்கள் மாநில அளவில் இருந்தாலும், தேசிய அளவில் கவனம் பெற்ற போராட்டம் 2019ல்தான் நடந்தது.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. முதலில் இஸ்லாமியர்களும், அவர்களுக்கு ஆதரவாக அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் இறங்கியிருந்தனர். டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் பெண்கள் திரண்டு போராட்டத்தில் இறங்கியது.. சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது.
மத்திய அரசால் புறக்கணிக்க முடியாத போராட்டமாக இது இருந்தது. போராட்டத்தின் முழக்கங்கள் அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானதாக இருந்தன. இருப்பினும் போராட்டங்களுக்கு பொறுப்பேற்று எந்த அமைச்சரும் பதவி விலகவில்லை.
இதற்கடுத்து 2020ல் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகத்தான் இந்த போராட்டம் தொடங்கியது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு விவசாயிகள் படையெடுத்தனர். டிராக்டர்களை ஓட்டிக்கொண்டு டெல்லிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுக்க ராட்சத கற்கள் தடைகளாக வைக்கப்பட்டிருந்தன. பள்ளம் தொண்டப்பட்டிருந்தது. சாலைகள் முழுதுவதும் இரும்பு முள்வேலி அமைக்கப்பட்டிருந்தது.
இது எதுவும் வேலை செய்யவில்லை. அனைத்தையும் தாண்டி அவர்கள் உள்ளே நுழைந்தனர். ஓராண்டு காலம் விவசாயிகளின் போராட்டம் நீடித்தது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் இதில் உயிரிழந்தனர். இருப்பினும் போராட்டம் பின்வாங்கப்படவில்லை. கடைசியாக மத்திய அரசு வழிக்கு வந்தது. 3 புதிய சட்டங்களையும் வாபஸ் பெற்றது. ஆனால், அப்போது கூட மத்திய வேளாண் துறை அமைச்சர் ராஜினாமா செய்யவில்லை.
இது நடந்து கொஞ்ச நாட்களிலேயே மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ராணுவத்தில் வேலை இருக்கும்.. ஆனால், நிரந்தர வேலை கிடையாது என்று இந்த சட்டம் சொன்னது. உடனே கொந்தளித்த இளைஞர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். ரயில்கள் கொளுத்தப்பட்டன. பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆனாலும், மத்திய அமைச்சர் யாரும் ராஜினாமா செய்யவில்லை.
இதற்கு அடுத்து பாஜக எம்பியான பிரிஜ் பூஷனுக்கு எதிராக நடந்த போராட்டம், மருத்துவர்களின் போராட்டம் என.. தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. அப்போதும் கூட அமைச்சர்கள் யாரும் ராஜினாமா செய்தது கிடையாது.
இதன் தொடர்ச்சியாகவே நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் டெல்லியில் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக பரவியது. போராட்டத்தின் தீவிரத்தை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. பேப்பர் லீக் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும், நீட் விவகாரத்தால் உ*யிரிழந்த மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்தது.
ஆனாலும் போராட்டத்தின் வீரியம் குறையவில்லை. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமான கோரிக்கை. இறுதியில் தற்போது தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமாவை அறிவித்திருக்கிறார்.
இப்படியாக கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்வது இதுவே முதல் முறையாகும். அதுவும் கரப்பான் ஜனதா கட்சி (சிஜேபி) என்படும் அமைப்பின் போராட்டத்தால் இது சாத்தியமாகியிருக்கிறது.




You must be logged in to post a comment.