இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் 12 மணி நேரத்தில் குற்றவாளி கைது
இராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி பகுதியில் தனியாக வசித்து வந்த ஆறுமுகம் (70) என்ற மூதாட்டி, 17.07.2026 அன்று காலை அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மூக்கு மற்றும் காதுகளில் இரத்தக் காயங்கள் காணப்பட்டதுடன், அவர் அணிந்திருந்த சுமார் அரை பவுன் தங்கத் தோடு திருடப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக ஏர்வாடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ஐந்து சிறப்பு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவ இடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 100-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், 60-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் வேலிக்குள் நுழைந்து பின்னர் அங்கிருந்து வெளியேறிய காட்சிகள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் கள விசாரணையின் அடிப்படையில், அந்த நபர் சத்திரக்குடி நோக்கி தப்பிச் சென்றது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிறப்பு காவல் குழுவினர் சத்திரக்குடி தனியார் பேக்கரி அருகே பதுங்கியிருந்த திருச்சி இனாம்புலியூர் பகுதியை சேர்ந்த எஸ். மோகன் (37), என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், குற்றவாளி உயிரிழந்த மூதாட்டியின் வீட்டிற்கு அருகே நடைபெற்ற பேருந்து நிறுத்தக் கட்டுமானப் பணியில் வேலை செய்தபோது, அவரிடம் ₹10,000 கடன் பெற்றிருந்ததும், அந்தக் கடனை திருப்பிச் செலுத்தாமல் மீண்டும் பணம் கேட்டபோது மூதாட்டி மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்து அவரை தள்ளிவிட்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவர் அணிந்திருந்த அரை பவுன் தங்கத் தோடை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், திருடப்பட்ட தங்கத் தோடு மீட்கப்பட்டது.
வழக்குப் பதிவு செய்யப்பட்டு 12 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து, திருடப்பட்ட நகையையும் மீட்ட சிறப்பு காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டுகளை தெரிவித்தார்




You must be logged in to post a comment.