இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பார்த்திபனூர் அருகே உள்ள அருங்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பரமக்குடி வட்டாட்சியர் ராமமூர்த்தி தலைமையில் வருவாய்த் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது, அரசாணையை தவறாகப் பயன்படுத்தி, மாதவன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி செம்மண் தோண்டி எடுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, செம்மணலுடன் TN 65 AF 3838 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரி மற்றும் பதிவெண் இல்லாத ஒரு பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், மேல் சட்ட நடவடிக்கைக்காக பார்த்திபனூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
சட்டவிரோதமாக மணல் மற்றும் கனிம வளங்களை தோண்டி எடுத்தல், கடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பரமக்குடி வட்டாட்சியர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளனர்.




You must be logged in to post a comment.