உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷாவின் “காவேரி கூக்குரல்” இயக்கம் இந்த ஆண்டுக்கான மரம் நடும் பணிகளை இன்று (ஜூன் 5) தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்வுகளில் விவசாய நிலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலத்தடி நீர் வளம் மேம்பாடு மற்றும் விவசாய நிலங்களின் உயிர்ச்சூழல் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் மற்றும் மாவட்டச் செயலாளர் முத்து பாரதி ஆகியோர் தலைமையில் சுமார் 2000 மரக்கன்றுகள் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடப்பட்டன.
இந்த நிகழ்வில் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.
“காவேரி கூக்குரல்” இயக்கம், காவேரி நதியின் நீர்வளம் மற்றும் விவசாய நிலங்களின் நிலைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பல்வேறு பசுமை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.




You must be logged in to post a comment.