பழனி கோவில் நகை திருட்டு வழக்கு! தடயங்களை சேகரிக்க வந்த இடத்தில் எஸ்ஐக்கு நேர்ந்த விபரீதம்..
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பாப்பம்பட்டியில் ஐவர்மலையில் திரவுபதி அம்மன் கோவிலுக்கு, திண்டுக்கல்லில் இருந்து தடயவியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் (வயது 33) தலைமையிலான குழுவினர் நேற்று காலை வந்தனர். கோவில் நகை திருட்டு வழக்கில் தடயங்களை சேகரிக்க வந்த இடத்தில் சப் இன்ஸ்பெக்டருக்கு விபரீதம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பாப்பம்பட்டியில் ஐவர்மலையில் திரவுபதி அம்மன் கோவில் இருக்கிறது. இந்த மலை கோவிலுக்கு சுமார் 200 படிகள் ஏறி போக வேண்டும். பௌர்ணமி, அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் திரவுபதி அம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திரவுபதி அம்மன் சிலையில் அணிவித்திருந்த 20 கிராம் வெள்ளி தாலிச்சங்கிலி, அதனுடன் இணைந்த அரை பவுன் தாலி ஆகியவை திருடு போய்விட்டது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பழனி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் பழனி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள்.
இதற்கிடையே கோவில் நகை திருட்டுபோன வழக்கில் தடயங்களை சேகரிப்பதற்காக திண்டுக்கல்லில் இருந்து தடயவியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் (வயது 33) தலைமையிலான குழுவினர் நேற்று காலை பாப்பம்பட்டிக்கு வந்தனர். பின்பு அடிவாரத்தில் இருந்து ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவிலுக்கு சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் உள்ளிட்ட போலீசார் படியில் ஏறி சென்றார்கள்.
ஆனால் பாதி தூரம் சென்றதும், திடீரென விக்னேஷுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து படியிலேயே மயங்கி விழுந்தார். அதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த சக போலீசார் விக்னேஷை மீட்டு பாப்பம்பட்டி சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பழனி போலீசார் மருத்துவமனைக்கு வந்தனர். பின்பு அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மயங்கி விழுந்து உயிரிழந்த விக்னேஷ், தேனி மாவட்டம் அரண்மனைப்புதூரை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி 4 வயது மகனும், 6 மாத குழந்தையும் உள்ளனர். திருட்டு வழக்கில் ஆய்வுக்கு வந்தபோது, மயங்கி விழுந்து தடயவியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் தேனி மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




You must be logged in to post a comment.