21 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வாக்குப்பதிவு நாள் வரை 144 தடை உத்தரவு: தேர்தல் விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டு சிறை!

வாக்குப்பதிவு நாள் வரை 144 தடை உத்தரவு: தேர்தல் விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டு சிறை!

எழுதியவர்: Askar April 21, 2026, 8:58 am

வாக்குப்பதிவு நாள் வரை 144 தடை உத்தரவு: தேர்தல் விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டு சிறை!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஏப்ரல் 21 மாலை 6 மணியுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

மேலும், தொகுதிக்குச் சம்பந்தமில்லாத வெளியாட்கள் வெளியேறவும், வாக்குப்பதிவு நாளன்று வாகனப் பயன்பாட்டிற்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்ய, 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், 21.4.2026 மாலை 6.00 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை பின்வரும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.

முக்கிய விதிமுறைகள்:

பொதுக்கூட்டங்களுக்குத் தடை: தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்கள் அல்லது ஊர்வலங்களை ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.

மின்னணு ஊடகப் பரப்புரைக்குத் தடை: திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், எக்ஸ் (Twitter) போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் இணையம் வாயிலாகத் தேர்தல் விவகாரங்களைப் பரப்புரை செய்யக் கூடாது. குறுஞ்செய்தி (SMS) மூலமானப் பரப்புரைகளுக்கும் இது பொருந்தும்.

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் பரப்புரை: பொதுமக்களை ஈர்க்கும் வகையிலான இசை நிகழ்ச்சிகள், திரையரங்கச் செயல்பாடுகள் அல்லது இதர பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விவரம்: மேற்கண்ட விதிமுறைகளை மீறுவோருக்கு 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126(2)-ன்படி, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

வெளியாட்கள் வெளியேற உத்தரவு:

தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் அனைவரும் 21.4.2026 மாலை 6.00 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

கல்யாண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்களில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா என்பதை அறியக் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

வாகனக் கட்டுப்பாடுகள்:

வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிகள் 21.4.2026 மாலை 6.00 மணி முதல் ரத்தாகும்.

வாக்குப்பதிவு நாளன்று அனுமதிக்கப்பட்ட வாகனங்கள்:

வேட்பாளரின் சொந்தப் பயன்பாட்டிற்கு ஒரு வாகனம்.

தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கு ஒரு வாகனம்.

வேட்பாளரின் பணியாளர்கள் அல்லது முகவர்களின் பயன்பாட்டிற்கு ஒரு வாகனம். (இந்த வாகனங்களுக்கான அனுமதியைத் தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவார்).

வாக்காளர் போக்குவரத்து மற்றும் அலுவலகங்கள்:

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வரவோ அல்லது திரும்ப அழைத்துச் செல்லவோ வேட்பாளர்கள் வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் மட்டுமே வேட்பாளர்களின் தேர்தல் பணிமனைகள் அமைக்கப்பட வேண்டும். அங்கு இரண்டு நபர்களுக்கு மேல் இருக்கக் கூடாது மற்றும் கூட்டமாகச் சேருவதைத் தவிர்க்க வேண்டும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!