கொடைரோடு சுங்கச்சாவடியில் (டோல்கேட்) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை.
திண்டுக்கலில் இருந்து, மதுரை நோக்கி செவ்வாய்க்கிழமை சென்ற, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை கொடைரோடு சுங்கச்சாவடியில் (டோல்கேட்) தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
திண்டுக்கல்லில், திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞர் அணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர், இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துக்கொண்டு திண்டுக்கல் – மதுரை நான்கு வழிச்சாலையில், மதுரையில் நடைபெறும் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, கொடைரோடு வழியாக மதுரை நோக்கி சென்றார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாகனம் கொடைரோடு சுங்கச்சாவடி அருகே வந்த போது, வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சகாதேவன், மகேஸ்வரன் கொண்ட குழுவினர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, உதயநிதி ஸ்டாலின் காரின் பின் பகுதியின் கார் டோரை திறந்து காரில் இருந்த பைகள், பேக்குகள் மற்றும் உடமைகளை சோதனை செய்தனர். இந்த சோதனை சுமார் ஐந்து நிமிடம் நடைபெற்றது. காரின் முன்சீட்டில் அமர்ந்து இருந்த உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பறக்கும் படையினருக்கு முழுஒத்துழைப்பு அளித்து வாகனத்தை சோதனை செய்ய அனுமதித்தார். உதயநிதி ஸ்டாலின் காரில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பி.செந்தில் குமார் உள்ளிட்ட மூன்று பேர் காரில் உடன் இருந்தனர். தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு பிறகு மதுரை நோக்கி உதயநிதி ஸ்டாலின் கார் சென்றது. துணை முதலமைச்சர் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.




You must be logged in to post a comment.