தென்மேற்கு பருவமழை தீவிரமடைய உள்ளதால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும், கேரளா மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் பரவலான மழை பெய்யும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்து உள்ளார். இது பற்றிய முழுமையான வானிலை அறிவிப்பில், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, கடைய நல்லூர், ஆகிய 4 தாலுகாவிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஆந்திரா ஒரிசா ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் புதிய காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இக்காற்று சுழற்சி தென்மேற்கு திசையில் இருந்து வலுவான ஈரப்பதம் மிக்க அரபிக்கடல் காற்றை மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஊடாக இழுப்பதன் காரணமாக நாளை முதல் கேரளா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பருவமழை தீவிரமடையும்.
ஜூன் 12 ஆம் தேதி முதல் கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்மழை பெய்யும். சில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. பிற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை பொறுத்தவரை நாங்கு நேரி, அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, கடைய நல்லூர், கொடைக்கானல், வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய 8 தாலுகாவிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும்.
குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை: தென்காசியில் தொடர் மழை பெய்யும் என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும். குறிப்பாக ஜுன் 14, 15 ஆகிய தேதிகளில் குற்றால அருவிகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. குற்றாலம் களைகட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும். பாபநாசம், முல்லை நீர்பிடிப்பு பகுதிகள், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும்.
மலைப் பகுதிகளுக்கு செல்ல தடை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர் மழை பெய்யும் என்பதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் மாஞ்சோலை, வால்பாறை நீலகிரி ஆகிய மலை வாழிடங்களுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். மேலும் ஆற்றங்கரை ஓரம் மற்றும் நீர்நிலைகளுக்கும் பொதுமக்கள் செல்ல வேண்டாம்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வலுவான தென்மேற்கு திசை வீசும் என்பதால் அரபிக்கடல், கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் லட்சத்தீவுகள் மத்திய மற்றும் தெற்கு வங்ககடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிகடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
பலத்த காற்று எச்சரிக்கை: தென்மேற்கு பருவகாற்று வலுவடைந்து உள்ளதால் தென் மாவட்டங்களில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். ஆரல்வாய் மொழி கணவாய், செங்கோட்டை கணவாய், அச்சன் கோவில் கணவாய், ஆண்டிப்பட்டி மற்றும் பாலக்காட்டு கணவாய் பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்.
அணைகளின் நிலவரம்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைய இருப்பதால் தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இந்த சுற்று மழையால் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பெரும்பாலான அணைகள் நிரம்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் ஆகிய அணைகள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை நீடிப்பு: நாளை தொடங்கும் பருவமழை, ஜுன் 14, 15 ஆம் தேதிகளில் மிக தீவிரம் அடையும். குமரி, நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டம் முழுவதும் மழை பெய்யும். பிற மாவட்டங்களை பொறுத்தவரை நாங்கு நேரி, அம்பா சமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், கொடைக் கானல், வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய 8 தாலுகாவில் மட்டும் நல்ல மழை பெய்யும். பிற மலையோர பகுதிகளான புளியங்குடி, வாசுதேவ நல்லூர், சிவகிரி, இராஜ பாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், கம்பம், தேனி, கோயம்புத்தூர் மாநகர் ஆகிய இடங்களில் மிதமான மழை விட்டு விட்டு பெய்யும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்