வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம்..

தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்து உள்ளதால் மத்திய மேற்கு வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.

 

இந்த நிலையில் பருவமழை மேலும் தீவிரமடையும் என எதிர் பார்க்கப்படுகிறது. மத்திய மேற்கு வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. உருவாகும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடல் ஈரப்பதத்தை கேரளா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஊடாக இழுக்கும் என்பதால் இன்று முதல் மழையின் அளவு படிப்படியாக தீவிரம் அடையும்.

 

மேலும், கேரளா மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோயம்புத்தூர் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை கொட்டி தீர்க்கும். குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெருமழை பெய்யும். மேலும் திருப்பூர்,தேனி மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது. குமுளி, தேக்கடி பெரியார் பகுதிகளில் மிக கனமழை பதிவாகும். பருவமழை தீவிரமடைய இருப்பதால் தென்காசி, மூணாறு, பொன்முடி ஊட்டி ஆகிய மலை பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!