இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்சினைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல்.இந்த ஊழல் நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழலை தடுக்கக்கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவே டிச.9 இன்று சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
“பொது சொத்துக்களை தனியாரின் கைகளுக்கு போக விடுவது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தவறாக பயன்படுத்துவது, பொதுப்பணத்தில் முறைகேடுகள் செய்வது” ஆகியவை ஊழல்களாக பார்க்கப்படுகிறது. இது பல வழிகளில் நடக்கிறது. லஞ்சம், மோசடி, டெண்டர்களில் விரும்பியவர்களுக்கு வளைந்து கொடுப்பது, சட்ட விதிகளை பின்பற்ற மறுப்பது ஆகியவற்றின் மூலம் ஊழல் பெருகுகிறது.ஊழல் தொடர்பாக மொத்தம் 177 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஊழல் குறைவாக உள்ள பட்டியலில் டென்மார்க், நியூசிலாந்து, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்தியா, 94வது இடத்தில் உள்ளது. அப்படியெனில் இந்தியாவை விட, 93 நாடுகளில் ஊழல் குறைவாக உள்ளது.
அரசு நிறுவனங்களில் நியாயமாக சான்றிதழ் பெறுவதற்கு, லஞ்சம் என்பது, அவசியமான ஒரு “ஆவணம்” என்று சொல்லும் அளவுக்கு நிலைமை படுமோசமாக உள்ளது. லஞ்சம் வாங்கிக்கொண்டு சட்ட விரோதமாகவும், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. லஞ்சம் வாங்குவதை அதிகாரிகள் ஒரு தொழிலாகவே பழகிவிட்டனர். நாட்டின் மக்களும் அதற்கு துணை போகின்ற நிர்பந்த நிலை உள்ளது. லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தாலும், இதனால் தண்டனை பெற்ற அதிகாரிகள் மற்றும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. “நாட்டு மக்கள் நமக்கு எதற்கு வம்பு” என்று எதிர்க்காமல் இருப்பதே இதற்கு காரணம். அரசு ஒரு திட்டத்தை உருவாக்குகிறது என்றால் அதனை வெற்றிகரமாக செயல்படுத்துவது அதிகாரிகளின் கைகளில் உள்ளது. அதிகாரிகளே தவறு செய்யும் போது, மக்களின் வரிப்பணம் ஊழல் என்ற பெயரில் தனிநபரின் பாக்கெட்டுக்கு செல்கிறது. ஒழிக்க வேண்டியவர்களே ஊழல் செய்தால் எப்படி நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும்.அரசு அலுவலங்களில் மட்டும் அல்ல, முக்கிய பொது இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினரின் முகவரி, போன் எண்களை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.
அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் தைரியமாக புகார் செய்ய முன் வர வேண்டும். ஊழல் வழக்கில் கைது செய்யப்படுபவர்களின் பெயர்களை, பொது இடங்களில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.ஊழல் வாதிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அவர்களது வேலையையும் பறிக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்களிடம் ஊழல் செய்யும் எண்ணம் வராது தடுக்க இயலும்.
ஆனால் தற்போது நடைமுறையில் ஊழல்,லஞ்சத்தில் ஈடுபாடு உடையவர்களே ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்கும் நோக்கில் பல விழிப்புணர்வுகளை செய்வதாகவும்,தடுக்க முயற்சிப்பது போன்றும் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையான தனது செயல்பாடுகளின் போது,கடமையின் போது இது நேர்மாறலாக உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை. இந்நிலை மாறும் போது லஞ்சம் ஊழல் ஒழிக்கப்படுவது உறுதி.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









