வத்தலகுண்டு அருகே, எழுவனம்பட்டியில் குலசாமி கோவில் திருவிழாவின் போது, சமையல் செய்து வைத்திருந்த சூடான ரசத்தில் விழுந்து, இரண்டு வயது குழந்தை திங்கள்கிழமை பலியானது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த, ஏழுவனம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (35) இவரது உறவினர் நந்தகோபால் என்பவரது குலசாமி கோவில் திருவிழா ஆடிப்பெருக்கு அன்று நடைபெற்றது.
இந்த திருவிழாவில் உறவினர்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக சாப்பாடு, சாம்பார், ரசம் உள்ளிட்ட சமையல் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சிவக்குமார் மகன்கள் கவின்குமார் (5) ஸ்ரீதரன் (2) ஆகிய இருவரும் சமையல் செய்யப்பட்டு இருந்த இடத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சூடான ரசம் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தின் மீது இரண்டு வயது குழந்தை ஸ்ரீதரன் ஏரி உட்கார்ந்த போது, அந்த சூடான பாத்திரத்தின் மூடி நழுவியதால், எதிர்பாராத விதமாக ஸ்ரீதரன் சூடான ரசத்தில் விழுந்தான்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் அவனை பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இரண்டு வயது குழந்தை ஸ்ரீதரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவிழாவிற்காக சமையல் செய்து வைக்கப்பட்டிருந்த சூடான ரசத்தில் குழந்தை விழுந்து இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
You must be logged in to post a comment.