ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்குட்பட்ட மாவிலங்கை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நல்லமுத்து ஈஸ்வரர் மற்றும் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயிலின் ஆறாம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, சிறப்பாக வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரமிக்க காளைகள் பங்கேற்றன. அதேபோல, இந்தக் காளைகளை அடக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து துடிப்புமிக்க காளையர்களும் கலந்துகொண்டனர்.வீரர்களின் கரகோஷங்களுக்கிடையே மஞ்சுவிரட்டு களைகட்டியது.
கடுமையான பலப்பரீட்சைக்குப் பிறகு, வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீர இளைஞர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் கிராம மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களை உற்சாகப்படுத்தினர். இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவிலங்கை கிராம மக்கள் ஒன்றுகூடி செய்திருந்தனர்.
மஞ்சுவிரட்டுடன், கோயில் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகளும் அன்னதான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாவிலங்கை கிராம மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இந்தத் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர்.