“திக்” திக் “திக்” ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை: நகைப் பிரியர்கள் அதிர்ச்சி..

தமிழகத்தில் நகைப்பிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.700-க்கும் மேல் உயர்ந்து ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக மாற்றமின்றி இருந்த தங்கம் விலை, இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ரூ.12,460-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.99,680 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அதேபோல், முதலீட்டாளர்கள் மற்றும் சிறிய ரக நகைகளுக்காக வாங்கப்படும் 18 கேரட் தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,400-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.83,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையைப் பின்பற்றி வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.213-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,13,000 என்ற நிலையை எட்டியுள்ளது.

கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.97,600-க்கு விற்கப்பட்டதே அப்போது மிகப்பெரிய உச்சமாகக் கருதப்பட்டது. அதன்பின்னர் நவம்பர் 5-ம் தேதி விலை சற்று குறைந்து சவரன் ரூ.89,440-க்கு வந்தபோது மக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால், அந்த நிம்மதி நீடிக்கவில்லை.

டிசம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து விலை மீண்டும் ‘கிடுகிடு’வென உயரத் தொடங்கியது. கடந்த 12-ம் தேதியே சவரன் ரூ.98,960-ஐத் தொட்டு மிரட்டிய நிலையில், இன்று மேலும் உயர்ந்து சவரன் ஒரு லட்சத்தை எட்ட இன்னும் வெறும் 320 ரூபாயே இடைவெளி உள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. திருமண சீசன் காலமான இப்போது, தங்கத்தின் இந்த அதிரடி விலை உயர்வு நடுத்தர குடும்பத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!