ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம்..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் கிளைகளின் சார்பாக ஒன்றிய அரசின் வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மாவட்டத் தலைவர் அப்துஸ் ஸலாம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் ஜலாலுதீன், பொருளாளர் சாதிக், துணைத் தலைவர் அப்துல் பாசித், துணைச் செயலாளர்கள் ஹாஜா மைதீன், புளியங்குடி பிலால் வடகரை சையது அலி, அப்துல் பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் ஆர்.அப்துல் கரீம், மாநில செயலாளர் அல் அமீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

 

இதில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் வாரியத் திருத்தச் சட்டத்தை கண்டித்துப் பேசிய மாநிலத் தலைவர் அப்துல்கரீம், இந்த சட்டம் இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்காக பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், மக்கள் நலனில் கவனம் செலுத்தி ஆட்சி நடத்தாமல் மத வெறுப்பை பரப்பி மட்டுமே இந்த ஆட்சி நடக்கிறது என குற்றம் சாட்டினார். மேலும் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை எமது ஜனநாயக ரீதியான போராட்டங்கள் ஓயாது என்று கூறினார்.

இந்த பொதுக் கூட்டத்தில் ஆயிரக் கணக்காண ஆண்களும், பெண்களும் கொட்டும் மழையில் எழுச்சியோடு கலந்து கொண்டனர். பொதுக் கூட்டத்தில், வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோஷங்களும் எழுப்பினர். இதில் டவுண் கிளை தலைவர் இஸ்மாயில், மதினா நகர் தலைவர் பாதுஷா, பேட்டை கிளை தலைவர் நல்லூர் சுலைமான், ரஹ்மானியாபுரம் கிளை தலைவர் பாரூக், மக்கா நகர் கிளை தலைவர் சேகனா, தவ்ஹீத் நகர் கிளை தலைவர் நிரஞ்சன் ஒளி, இ.பி கிளை தலைவர் சதாம் உசேன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட பொருளாளர் அன்வர் சாதிக் நன்றி கூறினார்.

 

இந்த கண்டன பொதுக் கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்திய உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் அவர்கள் தலைமையிலான அமர்வு புதிய வக்ஃப் திருத்த விசாரணை நிறைவு செய்து தனது தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் நிறுத்தி வைத்துள்ளது. அதுவரை உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை தொடரும். இந்நேரத்தில், இந்திய முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நீதியரசர்கள் நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும்.

 

பஹல்காம் படுகொலை, அதைத் தொடர்ந்து நடந்த ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் வகையில் நாடாளுமன்றக் குழு பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது, அதே நேரத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து எண்ணற்ற கேள்விகள் உள்ளன. போர் நிறுத்தத்தில் அமெரிக்க தலையீடு ஏன்?, நமது தரப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன?, பஹல்ஹாம் சம்பவத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு காரணம் யார்? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார், போரின் போது நாட்டின் பாதுகாப்பை உணர்ந்து அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் கூட்டப்பட வேண்டும்.

 

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் விபத்து காலங்களில் எலும்பு முறிவு ஏற்படும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு அனைத்து வசதிகளும் இருந்தும் உடனடி சிகிச்சை அளிக்காமல் கால தாமதப்படுத்தி அவர்களை தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுப்பும் அவல நிலையை வன்மையாக கண்டிக்கிறோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விடயத்தில் கவனம் செலுத்தி அல்லல் படும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைக்கு வழி வகுக்க வேண்டும். தென்காசி மாவட்டம் 2019-ல் தனியாக பிரிக்கப்பட்டு ஆண்டுகள் 6 கடந்த பின்னும் அடிப்படையான அரசு பொறியியல் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி, அரசு செவிலியர் கல்லூரி, வேளாண் கல்லூரி, சட்டக் கல்லூரி மற்றும் அறிவிக்கப்பட்டு பூர்வாங்க பணிகள் எதுவும் இல்லாமல் இருக்கும் மருத்துவ கல்லூரி உட்பட எந்தவித கல்வி கல்லூரிகளும் மாவட்ட தலைநகரில் இல்லாதது மாவட்ட மக்களின் கல்வி தாகத்தை குறைக்கும் வகையில் இருப்பதால் வரக்கூடிய கல்வி ஆண்டிற்குள் தென்காசியில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கல்வி நிலையங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!