தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் சார்பில், தென்காசி, பொட்டல் புதூர், முதலியார் பட்டி, செங்கோட்டை, அச்சன் புதூர், வடகரை, வீராணம், சங்கரன் கோவில், கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவ நல்லூர், திரிகூடபுரம், உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

 

நேற்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிறை தென்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது இதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடலில் அதிகாலை 6.00 மணி முதலே ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும் பெருநாள் தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர்.

 

இதனை தொடர்ந்து சரியாக 6:30 மணியளவில் மாநில பேச்சாளர் அப்துல் ரஹ்மான் தலைமை ஏற்று பெருநாள் தொழுகையை நடத்தினார். அதனைத் தொடர்ந்து குத்பா பிரசங்கம் செய்தார். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணை தலைவர் அப்துல் பாசித் மற்றும் டவுன் கிளை நிர்வாகிகள் இஸ்மாயில், குத்தூஸ், சையது மசூது, மாவட்ட துணைச் செயலாளர் மற்றொரு அப்துல் பாசித் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை டவுன் கிளை தொண்டர் அணியினர் செய்து இருந்தனர்.

 

இதே போன்று கடையநல்லூர் பேட்டை தவ்ஹீத் திடல் அப்துல் அஜீஸ், கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் தவ்ஹீத் நகர் தவ்ஹீத் திடல் செங்கை ஹாஜா, கடையநல்லூர் மக்கா நகர் தவ்ஹீத் திடல் ரபீக் ராஜா, கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் மர்யம் திடல் அப்துஸ் ஸலாம், கடையநல்லூர் மதினா நகர் தவ்ஹீத் திடல், அவ்வாப் பிள்ளை மைதீன், ரய்யான் திடல் ரய்யான் மைதீன், பாத்திமா நகர் மர்கஸ் திடல் அப்துல்லாஹ் குட்டி, மின்வாரிய நகர் தவ்ஹீத் திடல் சாஹத் என 9 இடங்களில் தொழுகை நடைபெற்றது. இந்த பெருநாள் தொழுகையில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் சிறப்பாக செய்து இருந்தனர்.

 

தொழுகைக்கு முன்பாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி புதிய பழைய பேருந்து நிலையம், மருத்துவமனை பேருந்து நிறுத்தம் மற்றும் தினசரி மார்க்கெட் பகுதிகளில் இனிப்புகளை வழங்கி ஒருவருக் கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!