தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள்..
இஸ்லாமிய சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்காக தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு நிர்வாகிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 13.06.2024 இன்று முகாம் அலுவலகத்தில், தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு தலைவர் எம். முஹம்மது பஷீர், செயலாளர் எஸ். முஹம்மது பெய்க், பொருளாளர் எஸ்.ஏ. லியாகத் அலி, துணை செயலாளர் எம். ஆரிப் சுல்தான் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஏ.காசிம் முஸ்தபா, ஆர். முஹம்மது பாரூக், யு. ஹனீபா ஆகியோர் சந்தித்து, இஸ்லாமிய சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களது தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசு, சிறுபான்மையினரின் நலனை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் முன்னோடியாக விளங்கி வருகிறது. முஸ்லிம் சமுதாய மக்களுக்கு உரிய வாய்ப்பை வழங்குவதன் மூலமும், அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை உறுதி செய்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலமும் சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 09.01.2024 அன்று கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனும், 17.02.2024 அன்று இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களது கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது.
அக்கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அவற்றை நிறைவேற்ற ஆணைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சிறுபான்மையின மக்களின் வழிபாட்டுத் தலங்களான கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள், இஸ்லாமியர்களின் மசூதிகள் ஆகியவற்றை புதிதாக கட்டுவதற்கும் ஏற்கனவே உள்ள வழிபாட்டுத் தலங்களை புனரமைப்பதற்கும் அரசு அனுமதி வழங்குவதில் இருந்து வந்த நடைமுறை சிக்கல்களை நீக்கி, எளிமையாக்கி இதற்கான ஆணைகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் வெளியிடப்பட்டதற்கு இச்சமுதாய மக்கள் தங்களது நன்றியினை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவர் எம். முஹம்மது பஷீர் மற்றும் நிர்வாகிகள் இன்றைய தினம் முதலமைச்சரை முகாம் அலுவலகத்தில் சந்தித்து தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வின்போது, சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் உடனிருந்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









