துணை வேந்தர்கள் மாநாடு:-ஆளுநருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?- செல்வப்பெருந்தகை ஆவேசம்!!

உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதை அனைவரும் அறிவார்கள். ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி, தலைநகர் தில்லி சென்று, அவரை சந்தித்த பிறகு வருகிற ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் துணை வேந்தர்கள் மாநாடு மூன்று நாட்கள் நீலகிரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானதோடு, இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இயற்றிய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு கூட்டுச் சதியை அரங்கேற்றியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்பை அப்பட்டமாக அவமதிக்கிற செயலாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் இருக்கிற வகையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து அது சட்டமாக நிறைவேறி தமிழக முதலமைச்சர் வேந்தராக பொறுப்பேற்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் உயர்கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டார்கள். இந்த மாநாட்டிற்கு போட்டியாக தமிழக ஆளுநர் அதே துணை வேந்தர்கள், பதிவாளர்களை அழைத்து மாநாடு கூட்டுவதற்கு ஆளுநருக்கு யார் அதிகாரம் அளித்தார்கள்? அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தமிழ்நாடு முதல்வரே வேந்தரான பிறகு, இந்த மாநாட்டை கூட்டுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது ? தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ள மறுத்த இந்தி திணிப்பை நோக்கமாகக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை பரப்ப வேண்டுமென்ற நோக்கத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி, பல்கலைக்கழக துணை வேந்தர்களின் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். ஆர்.என். ரவி கூட்டியிருக்கிற மாநாடு ஒரு சட்டவிரோதமான மாநாடாகும். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தை அவமதித்ததோடு, ஜனநாயகப் படுகொலையை ஆளுநர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். ஆளுநரின் இத்தகைய சட்டவிரோத செயலுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் துணை போயிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கிற வகையில் வருகிற ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரியில் நடைபெறுவதை எதிர்த்தும், இம்மாநாட்டை கூட்டுகிற ஆளுநர் ஆர்.என். ரவியின் சட்டவிரோதப் போக்கை கண்டிக்கிற வகையிலும் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.கணேஷ் அவர்கள் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக ஆளுநர் ஆர்.என். ரவியின் தமிழ்நாட்டு நலன்களுக்கு விரோதமாக கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் சீரழிக்கும் செயல்களை கண்டிக்கிற வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் காங்கிரஸ் பேரியக்க கொடிகளை கரங்களில் ஏந்தி பங்கேற்று தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!