உலக நாடுகள் பல, தங்களது தாய் மொழியைத் தூக்கிப் பிடிக்கும் வேளையில், இந்தியாவின் உயிராகவும், உடலாகவும் விளங்கும் மாநிலங்களின் தாய் மொழிகள் அழிக்கப்படுகின்றன.
குறிப்பாக, ஒன்றியத்தில் ஆட்சி புரியில் பா.ஜ.க வகுக்கும் மும்மொழிக் கொள்கை, குற்றவியல் சட்டத்திருத்தம் உள்ளிட்டவை, மாநில மொழிகளை நசுக்குவதாய் அமைந்துள்ளன.
இந்தியாவிற்கென்று, தேசிய மொழி ஒன்று அமைக்கப்படாத போதிலும், ஒரு குறிப்பிட்ட மொழியை தேசிய மொழியாக திணிக்க முற்படுகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. இதுபோன்ற சூழலில், தமிழை ஆட்சிமொழியாக, முழுவதுமாக நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் அவர்கள், தமிழ்நாட்டில் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், அனைத்து தலைமைச் செயலக துறைகள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்து துறைத் தலைமை அலுவலர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்கள் பின்வருமாறு,
1.அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்படல் வேண்டும்.
2. சுற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயே இருக்கவேண்டும்.
3.துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடிதம் போக்குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும் தமிழில் தாள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
4.பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் எழுதுவதுமில்லாமல், அவை பற்றிய குறிப்புகள் யாவும் தமிழிலேயே இருக்க வேண்டும்.
5.அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.
6.மேலும் ஆங்கிலத்தில் வெளியிட விலக்களிக்கப்பட்டுள்ள இனங்களுக்கு நேர்வுக்கேற்ப தலைமைச்செயலகத் துறைகளால் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகளை தமிழில் வெளியிடுவதற்கு ஏதுவாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவு மூலம் தமிழாக்கம் செய்வதற்கு அனுப்பிவைக்கவும் அல்லது அந்தந்த துறைகளாலேயே தமிழில் மொழிபெயர்க்கப்படும் அரசாணைகளை தேவைப்படின் கூர்ந்தாய்வு செய்யும் பொருட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவுக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
You must be logged in to post a comment.