டிக்-டாக் செயலியை தடை செய்வது குறித்து 24ம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு டிக்-டாக் செயலி குறித்து 24ம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்காவட்டால் மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த தடை நீக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து, அதுவரை நீதிமன்றம் பிறப்பித்தத் தடையை நீக்கவும் மறுத்துவிட்டது. ஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக “டிக் டாக்’ மாறியுள்ளது. இந்த செயலியால், இளைஞர்கள் தவறான வழிக்கு செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாகவும், ஆபாச விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சமூக நலன், மக்கள் நலன் கருதி அந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், டிக் டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 3-ஆம் தேதி உத்தரவிட்டது.
மேலும், டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் விடியோக்களை ஊடகங்கள் ஒளிபரப்பவும் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, டிக் டாக் செயலியை அறிமுகம் செய்துள்ள சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீன நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி முன்வைத்த வாதம்:
டிக் டாக் செயலியை 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். தங்களது தரப்பு கருத்தை கேட்காமலேயே அந்தச் செயலிக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்திருக்கக் கூடாது. எனவே, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
அதற்குப் பதிலளித்து நீதிபதிகள் கூறியதாவது: டிக் டாக் செயலிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்கால உத்தரவு மட்டுமே பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை, அந்த நீதிமன்றம், ஏப்ரல் 16-ஆம் தேதி விசாரிக்கவுள்ளது. இதேபோல், இந்த வழக்கை நாங்கள் முடிக்கவில்லை. இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையே விசாரிக்கும். மேலும், பல்வேறு தரப்பினரின் கருத்தை அறிய விரும்புவதால், இந்த மனு மீதான விசாரணை, வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, டிக்-டாக் செயலி தொடர்பாக என்ன முடிவெடுத்தீர்கள் என்றும், வரும் 24ம் தேதி அதாவது புதன்கிழமை வழக்கில் தீர்ப்பளிக்காவிட்டால் தடை தானாகவே நீங்கிவிடும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









