தென்காசி தொகுதி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குணராம நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேல மெஞ்ஞானபுரம் கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைத்திட வலியுறுத்தி தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் குணராம நல்லூர் ஊராட்சியில், தென்காசியில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் மேல மெஞ்ஞானபுரம் கிராமத்தில் சாலையின் இடதுபுறம் பேருந்து நிழற்குடை இருந்தது. நான்குவழி சாலை விரிவாக்கத்தின் போது மேற்படி பேருந்து நிழற்கூடை அகற்றப்பட்டு இராமலிங்கபுரம் பகுதியில் புதிய நிழற்குடை அமைத்தனர். மேற்காணும் இடத்தில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்ட பின்னர் மேல மெஞ்ஞானபுரம் மக்கள் ஏற்கனவே பேருந்து நிறுத்த நிழற்குடை (Ch 48/130)-ல் இருந்த இடத்திலேயே அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 03.02.2024 அன்று தென்காசி வட்டாட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட சமாதானக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையினை செயல்படுத்த நெடுஞ்சாலைத் துறை நிர்வாகத்தினைக் கண்டித்து மேல மெஞ்ஞானபுரம் பொது மக்கள் தேர்தலை புறக்கணிப்பு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இருந்து நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன் பொருட்டு 08.04.2024 அன்று வட்டாட்சியர் மற்றும் காவல் துறை ஆகியோர் முன்னிலையில் இராமலிங்கபுரம் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், மேல மெஞ்ஞானபுரம் கிராம பொதுமக்கள் தற்காலிகமாக பயணியர் நிழற்குடை அமைக்க அனுமதி வழங்கிய பின் அங்கு பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. அந்த தற்காலிக பயணியர் நிழற்குடையை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் அகற்றியதால் மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. ஆதலால் தாங்கள் இரு கிராம மக்களிடையே எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாதவாறு தென்காசி-திருநெல்வேலி நான்கு வழி சாலையில் மேல மெஞ்ஞானபுரத்தில் சாலையின் இடதுபுறம் புதியதாக பயணியர் நிழற்குடை அமைத்து கொடுத்து இரு கிராம பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்